Sunday, June 6, 2010

மென்முள்

நெடுங்காலமாக வாசிக்க நினைத்து, நேற்று வாசித்து முடித்த புத்தகம்-மோகமுள். தி.ஜா என்றவுடன் பலரும் சொல்லுவது மோகமுள். ஆனால் நான் 'அம்மா வந்தாள்', 'தி.ஜா சிறுகதைகள்', 'நடந்தாய் வாழி காவேரி', பிறகுதான் மோகமுள் வந்தடைந்தேன். மோகமுள், பல கிளை கதைகள், நிறைய கதாபாத்திரங்கள், பல்வேறுபட்ட கதை நிகழ்விடங்கள் என எந்த சிறந்த படைப்பாளியின் 'magnum opus'யிலிருக்கும் அனைத்து விசயங்களும் கொண்ட படைப்பு. எந்த ஒரு படைப்பாளியின் நெடுங்கனவு.

திஜாவின் எழுத்தில் ஒருவித எளிமை இருக்கும் . எதோ சாதரணமாய் செய்து விட்ட மாதிரி இருக்கும். அதை நாம் திருப்பி சொல்ல முயற்சிக்கும் போதுதன் தெரியும், அதிலுள்ள சிக்கல்கள். திஜா வின் முத்திரை, புத்தகத்தின் பல இடங்களில் காண முடிகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கின்றதா என்றால் இல்லை. இது என் தனிப்பட்ட பிரச்சினையாக கூட இருக்கலாம். ஒரு ராகத்தை எடுத்து ஒரு மணி நேரம் அதில் உள்ள நுணுக்கங்களை காட்டுகிற திறமையுடைய பாடகர் ஒருவரின், '2 மணி நேரத்தில் 6 பாட்டு' கச்சேரி கேட்பது போல் உள்ளது. திஜாவின் மிக சிறந்த வித்தைகளை படித்து விட்டு 'மோகமுள் ளில்' கிடைப்பது, an average experience for thi.ja standard.

மோகமுள் திரைப்படமாக எடுத்து கொண்டு இருந்த நேரமது, தினமணி கதிரில் வந்த கட்டுரையில், இருவர் மோகமுள் வாசித்து விட்டு அதே நினைப்புடன் கும்பகோணம் சென்று ஏமாந்து வந்ததாய் ஒரு செய்தி இருக்கும். உண்மையில் ஒரு இடத்தை விவரிக்கும் போது நம்மை அங்கு கொண்டு போய் அமர்த்திவிடுகிறார். இக்கதை அரை நூற்றாண்டுக்கு முந்தயைது, என்பது மறந்து போய், அந்த தெருக்களில் நாமும் உலாவுகிறோம். அவற்றின் அழகில் மயங்கி அதை காண விழையும் நொடியில்தான் புத்திக்கு எட்டுகிறது, இது கதையென்பது. இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்துவதில் திஜாவைவிட சிறந்தவரை நான் இன்னும் வாசிக்கவில்லை.

நிகழ்வுகளை, எண்ண ஓட்டங்களை விவரிக்கும் போது இரண்டிரண்டு படிகளாய் துள்ளும் நடை வாசிப்பாளனிடம் ஒரு வித புத்திசாலிதனத்தை எதிர்பார்கிறது. இந்த jump திஜாவின் மற்ற படைப்புகளை விட இதில் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலும் கதை அதிகம் அலட்டிகொள்ளாது நிதானமாய் செல்லும் இரயில் போலவே செல்லுகிறது. ஆனால் முடிவில் எதோ துரித கதியில் எல்லோருடைய ஒப்புதலையும் பெற்று கதை முடியும் போது, இத்தகைய நாவலுக்குரிய முடிவாய் இல்லாமல் எதோ பின் குறிப்பு படிப்பது போல் உள்ளது.

திஜாவின் படைப்புலகில் சிக்கல்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் உளசிக்கல்களேயன்றி, பிற மனிதர்களாலோ, நிகழ்வுகளாலோ வருவது அல்ல. வளைவுகளோ, திருப்பங்களோ இல்லாத , இரு பக்கங்களும் பசுமை எழில் நிறைந்த சாலையில் நடப்பது போன்ற ரம்மியமான அனுபவம். பிரச்சினை கதை இப்படியே 700 பக்கங்களுக்கு செல்லும் போது ஒரு வித தொய்வு ஏற்படுகிறது. இதனால்தான் என்னவோ எனக்கு இன்றும் , நான் பள்ளியில் படித்த சிறுகதை (கருணையே உருவான ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை தண்டித்துவிடுதல் பற்றிய கதையது) ஏற்படுத்திய தாக்கத்தை மற்றவை ஏற்படுத்துவதில்லை.

No comments: